
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதாவது ஒரு மாணவருடன் மாணவி தனிமையில் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த ஞானசேகரன் அவர்களை மிரட்டி மாணவியை பல்கலைக்கழக வளாகத்தில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்தார்.
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளி ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது ஏற்கனவே ஒரு பாலியல் வழக்கு, திருட்டு வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இந்த வழக்கின் விசாரணையின் போது ஞானசேகரனை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் இன்று தண்டனை பற்றிய விவரங்களை அறிவிப்பதாக கூறியது. அதன்படி இன்று காலை தீர்ப்பு வெளியானது. அவருக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் ஞானசேகருக்கு 30 வருடங்களுக்கும் குறையாத ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது.
அதாவது 30 வருடங்களுக்கு குறைக்க முடியாத ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதோடு 90 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஞானசேகருக்கு எந்தவிதமான சலுகைகளும் வழங்கக்கூடாது. அவர் ஏக காலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி ராஜலட்சுமி தண்டனை விபரங்களை அறிவித்ததும் ஞானசேகரன் அழுதார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்த நிலையில் தற்போது ஞானசேகரனுக்கு 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனையும் சேர்த்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே அறிவித்த நிவாரண தொகையுடன் சேர்த்து ஞானசேகரன் செலுத்தும் அபராத தொகையையும் சேர்த்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.