ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சித்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில் இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்தது. கிட்டத்தட்ட 3 நாட்களாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்ற நிலையில் பின்னர் முடிவுக்கு வந்தது.

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தாக்குதல் நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக பிரதமர் மோடி அங்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டதால் பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டது. அங்கு அமைதியான சூழல் திரும்பியதும் பிரதமர் மோடி காஷ்மீர் செல்வதாக இருந்த நிலையில் இன்று அங்கு சென்றுள்ளார்.

பாகிஸ்தான் போருக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று காஷ்மீர் சென்ற நிலையில் அங்கு உலகின் மிக உயரமான பாலத்தை திறந்து வைத்தார். அதாவது செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைந்த வடிவிலான பாலம் ரயில்வேயால் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் இது உலகின் மிக உயரமான பாலமாக கருதப்படுகிறது.

இது ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்த உதவும். இந்த பாலத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை தற்போது  பிரதமர் மோடி திறந்த வைத்த நிலையில் அதனை ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து கம்பிவழி ரயில் பாலமான அஞ்சி பாலத்தையும் திறந்து வைக்கிறார்.

 

இந்த நிகழ்ச்சிகளுக்கு பிறகு பிற்பகல் 12 மணி அளவில் ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கோவில் அமைந்துள்ள கத்ரா பகுதியில் இருந்து ஸ்ரீநகருக்கு செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். அதோடு 46,000 கோடிக்கு அதிகமான புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ஏற்கனவே அங்கு நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கி வைத்து நாட்டுக்காக அர்ப்பணிக்க இருக்கிறார்.