பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் கஞ்சன் குமாரி என்ற ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் அறுவைசிகிச்சை செய்வது போலக் காணப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், மருத்துவமனையைப் போல் இல்லாத, பாதுகாப்பற்ற இடத்தில் ஒரு பெண்ணுக்கு அறுவைசிகிச்சை நடக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

 

அறுவைசிகிச்சைக்கு தேவையான அடிப்படை சுகாதார வசதிகளும், ஸ்டெரிலைசேஷன் முறைகளும் இல்லாமல் இந்த அறுவைசிகிச்சை நடைபெறுவது காணப்படுகிறது. அறுவைசிகிச்சை நடக்கும் போது கஞ்சன் குமாரி முகமூடி, கையுறை போன்ற மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்தவில்லை.

அதுமட்டுமல்லாமல், அந்த அறையில் நோயாளியின் உறவினர்கள் சாதாரண உடையுடன் நின்று கொண்டு வீடியோ எடுப்பதும் அந்த வீடியோவில் தெளிவாகக் காணப்படுகிறது. இது மருத்துவ நெறிமுறைகளுக்கும், மனிதநேயம் கொண்ட ஒழுங்குமுறைக்கும் மிகப்பெரிய அவமரியாதையாகப் பார்க்கப்படுகிறது.

இந்த வீடியோவை ‘THE SKIN DOCTOR’ என்ற சமூக வலைதள பயனர் பகிர்ந்துள்ளார். அவர் இந்த சம்பவத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். “இதுபோல் எந்த மருத்துவ தகுதியும் இல்லாதவர்களால் அறுவைசிகிச்சை செய்யப்படுவது மிகவும் ஆபத்தானது. இது குற்றச் செயலாகக் கணிக்கப்பட வேண்டும்,” என தெரிவித்துள்ளார். மேலும், கஞ்சன் குமாரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை ‘gynaecologist and obstetrician’ என குறிப்பிட்டிருந்தார். தற்போது அந்தக் கணக்கை தனிப்பட்டதாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தால் சமூக வலைதளங்களில் வலுத்த எதிர்வினை எழுந்துள்ளது. “இது மருத்துவமனையல்ல, குற்றவாளிகளின் மேடையாக இருக்கிறது,” என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.  மற்றொருவர், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனக் கூறியுள்ளார். மருத்துவ ஒழுங்குமுறை மீறப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்ற வலியுறுத்தல் எழுந்துள்ளது.