
டெல்லியில் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் பாஜகவுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மீது, பாஜக கடும் குற்றம் சாட்டி வருகிறது. அதாவது முதல்வர் மாளிகை மறுசீரமைப்புக்கு டெல்லி மக்களின் பணத்தை செலவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலை விளம்பரத்தின் முன்னோடி என்று பாஜக எம்.பி சம்பித் பத்ரா கிண்டல் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, இன்று முதல் அரவிந்த் கெஜ்ரிவால் விளம்பரம் முன்னோடி என்று அழைக்கப்பட வேண்டும். பிசினஸ் பிளாஸ்டர்ஸ் திட்டத்திற்காக அரசு மொத்தமாக 54 கோடி செலவு செய்தது. எனினும் இந்த திட்டத்தின் விளம்பரத்திற்காக 80 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இத்திட்டத்திற்கான தொகையை விட 1.5 மடங்கு விளம்பத்திற்காக அதிகமாக செலவிடப்பட்டுள்ளது என்று சிஏஜி தெரிவித்துள்ளது.
மற்றொரு திட்டத்திற்கு 1.9 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு, அதனுடைய விளம்பரத்திற்காக 27.9 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. சிஏஜி அறிக்கையின்படி மார்ச் மாதம் 17ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசு வீட்டை புதுப்பித்துக் கட்ட பரிந்துரை கொடுத்தது. அதில் கட்டிடத்தை இடித்து மேலே ஒரு மாடி கட்டுவதற்கு பரிந்துரைக்கப்பட்டது. ஒரே நாளில் அந்த பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று பத்ரா கூறினார்.