பெஞ்சல் புயல் தமிழக கடற்பகுதியை நெருங்குகிறது. சென்னையில் இருந்து மணிக்கு 90 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதனால் வட தமிழ்நாடு, புதுச்சேரி தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் பெஞ்சல் புயல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த புயல் இன்று காரைக்கால் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சேலம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 3 மணி நேரம் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.