ஏர் இந்தியா விமான நிறுவனம் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. தொடர்ந்து பயணிகள் அடிப்படை வசதிகள், சுகாதாரமின்மை போன்ற பல கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதே போன்ற சமீபத்தில் பருல் கன்வார் என்ற பெண்மணி தனது வயதான பாட்டிக்கு வீல் சேர் வழங்க மறுத்த ஏர் இந்தியா நிறுவனத்தை விமர்சித்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பதிவில், கன்வார் தனது 82 வயதான பாட்டிக்கு டெல்லியில் இருந்து பெங்களூருக்கு செல்வதற்காக கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி ஏர் இந்தியா நிறுவன விமானத்தில் முன்பதிவு செய்ததாகவும், அதில் வீல் சேர் சேவையை முன் பதிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் விமான நிலையத்தில் ஒரு மணி நேரமாக கோரிக்கை வைத்தும் வீல் சேர் வழங்கப்படவில்லை. விமான நிலைய ஊழியர்களிடம் கேட்டும் எந்தவித உதவியும் செய்ய முன்வரவில்லை என பதிவிட்டு இருந்தார். மேலும் பாட்டியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் கால் வலுவிழந்து இருப்பதால் ஏர் இந்தியா பிரிமியம் எக்கனாமி கவுண்டரின் அருகே கீழே விழுந்ததாகவும், ஆனால் எந்த ஏர் இந்தியா ஊழியர்களும் உதவ முன் வரவில்லை. முதலுதவிக்கு அழைத்தும் யாரும் உதவ வரவில்லை எனவும், குடும்ப உறுப்பினர்களே மருத்துவர அறைக்கு சென்று உதவியை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஊழியர்கள் பதில் அளித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஏர் இந்தியாவின் அலட்சியத்தால் மருத்துவ கவனம் இன்றி தனது பாட்டி விமானத்தில் ஏறியதாகவும், கீழே விழுந்ததில் அவருக்கு மூக்கில் அடிபட்டதாகவும் தெரிவித்தார். இதனை அடுத்து பெங்களூர் விமான நிலையத்தில் அவருக்கு மருத்துவ உதவி ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு மருத்துவர்கள் தனது பாட்டிக்கு இரண்டு தையல்கள் போட்டு அனுப்பி வைத்தனர். தற்போது தனது பாட்டி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவர் இடது பக்கம் செயலிழந்து உள்ளதாகவும் கன்வார் தனது பதிவில் தெரிவித்து இருந்தார். இந்த விமர்சனத்திற்கு பதில் அளித்த ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்ததாவது,” உங்கள் பாட்டிக்கு விரைவாக குணமாக வாழ்த்துகிறோம். இது தொடர்பாக விரைவில் முழுமையான தகவல்களை வழங்குகிறோம்” என தெரிவித்துள்ளது. இச்சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி பல்வேறு கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் பெற்று வருகிறது.