தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூறியிருந்ததாவது, கடந்த 19ம் தேதி அன்று பள்ளிக்கல்வி துறையின் தொழில் கல்வி இணை இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையான 1.5 கோடி உடனடியாக செலுத்த வேண்டும். இல்லையென்றால் சேவை துண்டிக்கப்படும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை என்று எதுவும் இல்லை என்று பொய் சொல்லி இருக்கிறார். அப்படியானால் பள்ளி கல்வித்துறையின் தொழிற்கல்வி இணை இயக்குனர் பொய் சொல்கிறாரா?. சாதாரண நிகழ்வுகளை கூட சாதனை படைத்தது போல காட்டிக் கொள்ளும் விளம்பர மாடல் ஆட்சியில், எந்த துறையும் தங்களுக்கான வேலையை ஒழுங்காக செய்யவில்லை. எனவே பள்ளி கல்வித்துறை அமைச்சர் வறட்டு கவுரவத்தை காப்பாற்றுவதற்காக மீண்டும் பொய் சொல்வதை நிறுத்திவிட்டு, மாணவர்களின் கல்வியோடு விளையாடாமல் இணைப்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வலியுறுத்துகிறோம் என்று கூறினார்.