சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள பகுதியில் சுபாஷ் சந்திரபோஸ்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் மின்வாரியத்தில் ஒப்பந்ததாரராக உள்ள தனது தந்தைக்கு உடந்தையாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி அன்று சுபாஷ் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தனது நண்பனின் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டார்.

அங்கு நடந்த டிஜே நிகழ்ச்சியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து சுபாஷ் நடனம் ஆடியுள்ளார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அவரது நண்பர்கள் மற்றும் மணமக்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.