
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் முகமது பாசில் (24). இவரது தந்தை அப்பகுதியில் கேபிள்டிவி ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு உதவியாக முகமது பாசில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அச்சன்புதூர் பகுதியில் 4 நாட்களாக மழை மற்றும் பலத்த காற்று காரணமாக அப்பகுதி வீடுகளில் சரிவர கேபிள் டிவி தெரியவில்லை.
அதனால் அங்குள்ள ஒரு தெருவில் கேபிள் டிவி ஒயரை சரி செய்வதற்காக முகமது பாசில் சென்றுள்ளார். அப்போது கேபிள் ஒயரை இழுத்த போது பாசில் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அதனால் தூக்கி வீசப்பட்ட பாசிலை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாசில் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த அச்சன்புதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.