அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறை பதவியேற்று உள்ள டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதில் அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை  கைது செய்து நாடு கடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி நூற்றுக்கணக்கான ராணுவ விமானங்கள் மூலம் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இதில் மெக்ஸிகோ, கொலம்பியா, பிரேசில் ஆகிய நாடுகளில் சேர்ந்த மக்களும் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க பிரபல பாப் பாடகி செலினா கோம்ஸ் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பதிவில் அவர் தெரிவித்ததாவது,”குழந்தைகள் முதல் மக்கள் அனைவரும் நாடு கடத்தப்படுகிறார்கள். எனக்கு எதுவும் புரியவில்லை. இதற்கு நான் ஏதாவது செய்ய விரும்புகிறேன் ஆனால் என்னால் முடியவில்லை எல்லா வழிகளிலும் நான் முயற்சி செய்கிறேன் என்று வாக்கு கொடுக்கிறேன்” என தெரிவித்திருந்தார். ஆனால் இந்த அறிவிப்புக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வந்ததால் இதனை செலினாக கோம்ஸ் தனது இணைய பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். செலினா கோம்ஸின் இந்த பதிவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வெள்ளை மாளிகை சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் சட்ட விரோதமாக நாட்டில் குடியேறியவர்களால் கொல்லப்பட்டதாக கூறும்  குழந்தைகளின் மூன்று தாய்மார்களின் வீடியோவை பகிர்ந்துள்ளது. அதில் அவர்கள் பேசியதாவது,”செலினா கோம்ஸ் நீங்கள் யாருக்காக அழுகிறீர்கள் என உங்களுக்கு தெரியாது. சட்டவிரோதமாக குடியேறியவர்களால் வன்கொடுமை செய்யப்பட்டு அடித்துக் கொடூரமாக கொல்லப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு என்ன பதில்? அவர்கள் எங்கள் பிள்ளைகளுக்காக அழவில்லையே”என தெரிவித்திருந்தனர். மேலும் செலினா கோம்ஸ் பொய்யான அழுகையை வெளிப்படுத்தி நாட்டில் சட்டமற்ற நிலையை ஊக்குவிக்க விரும்புகிறார். எனவும் தெரிவித்தனர்.