மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் நாக்கா பகுதியில் வசித்து வந்தவர் இளம்பெண் பாயல் ஷிண்டே (19). இந்த இளம் பெண்ணை அவரது தாய் வழி உறவினரான கேதர் கணேஷ் என்பவர் காதலித்து வந்துள்ளார். ஆனால் பாயல் ஷிண்டே வேறொரு நபரை காதலிப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த கேதர் கணேஷ் இந்த இளம் பெண்ணை சந்தேகபட்டு அவரை சந்திக்க சென்றுள்ளார். இந்த நிலையில் பாயல் ஷிண்டே சம்பவ தினத்தன்று காலை 9:30 மணி அளவில் உதத்துமா அனந்த் கன்கேர் கோல்ப்கிளப் மைதானத்தில் நடைபயிற்சி  செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை சந்தித்த கணேஷ், அப்பெண்ணிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் அதிகமாக இறுதியில் ஆத்திரத்தில் கணேஷ் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து பாயல்  ஷிண்டேவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பாயல் சம்பவ இடத்திலேயே மயங்கி சரிந்துள்ளார். இதனை கவனித்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையில் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய கேதர் கணேஷை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து கேதார் கணேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.