
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பகுதியில் இடிந்த பாழடைந்த வீட்டில் இளம் பெண் ஒருவரின் தலை சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரின் தலை சிதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே பெரிய கல் ஒன்று கிடந்தது. இதனால் மர்ம நபர்கள் தலையில் கல்லை போட்டுக்கொண்டு கொன்றது தெரியவந்தது.
மேலும் அந்தப் பெண் செவிலியர் சீருடை அணிந்திருந்தார். அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இறந்த பெண் மதுரையை சேர்ந்த சித்ரா (28) என்பது தெரிய வந்தது.
கடந்த 20 நாட்களுக்கு முன்பாக அவர் வேலைக்கு சென்றுள்ளார். அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. சித்ரா தனது கணவரான ராஜேஷ் கண்ணாவை விட்டு தனியாக குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். மனைவியை அழைத்துச் செல்வதற்காக கணவன் ராஜேஷ் கண்ணா வந்த போதுதான் சித்ரா கொலை நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜேஷ் கண்ணாவும் தலைமுறைவாகியுள்ளதால், அவர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது தலைமுறைவாக உள்ள சித்ராவின் கணவர் ராஜேஷ் கண்ணாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்