உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நாகினா நகரின் செவாலி காவ்ன்வாடி பகுதியில் வசிக்கும் 70 வயதான விவசாயி நாதன் சிங், கடந்த புதன்கிழமை காலை தனது வயலில் காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்த போது, திடீரென ஒரு நீலகை மான் வந்து அவரை தாக்கியது.

அதன் கொம்புகளால் பலமுறை தாக்கிய நீலகை மானால் நாதன் சிங் படுகாயமடைந்தார். பின்னர் அங்கிருந்து உயிரைக் காப்பாற்ற முயன்ற அவர் எப்படியோ வீட்டை அடைந்தார். உடனே அவரை அவரது உறவினர்கள் அருகிலுள்ள சமூக மருத்துவமனைக்கு (CHC) கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த பரிதாபமான சம்பவத்துக்குப் பிறகு, நாதன் சிங்கை தாக்கிய நீலகை மான் பயந்த நிலையில் அப்பகுதியிலுள்ள அம்பேத்கர் நகர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. அங்கு வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பல கார்களை மோதியது.

அப்போது வாகனங்களை தலையால் பலமுறை மோதிய நீலகை, கடுமையான காயங்களால் இறந்தது. இதைத் தொடர்ந்து, வனத்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் இணைந்து அந்த நீலகையின் உடலை மீட்டனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி பிரதீப் குமார் சர்மா கூறியதாவது, “மக்கள் கூட்டம், நாய்கள் குரைப்பது போன்ற காரணங்களால் நீலகை பயந்திருக்கலாம். இதனால், தடுப்பு அறிவை இழந்து தாக்குதல் நடத்தியிருக்க வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்தார்.

இசசம்பவத்தை அடுத்து மனிதர்கள் வாழும் பகுதிக்குள் வனவிலங்குகள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை தடுக்கும் வகையில் வனப்பகுதிகள் அருகே பாதுகாப்பு சுவர், வேலி போன்ற உள்கட்டமைப்புகள் அவசியம் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.