2026 யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டியில், ரஷ்ய வீரர் டானில் மெட்வெடேவ் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்ஸ்னியை எதிர்த்து விளையாடினார். லூயிஸ் ஆம்ஸ்ட்ராங் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் போது, ஆடுகளத்தின் வலையின் மீது திடீரென இரண்டு பறவைகள் வந்து அமர்ந்ததால் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.
இரண்டாவது செட் போட்டியின் நடுவே இந்த விசித்திரமான சம்பவம் அரங்கேறியது. மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஆட்டத்தைப் பற்றிப் சிறிதும் கவலைப்படாமல், அந்த இரண்டு பறவைகளும் வலையின் மீதே அமைதியாக அமர்ந்திருந்தன. வீரர்களும் பறவைகளுக்கு இடையூறு இல்லாமல் தங்களது ராலியைத் தொடர்ந்து விளையாடினர்.
ஆட்டம் தொடர்ந்தபோது, மெட்வெடேவ் மைதானத்தின் மூலையை நோக்கி அடித்த ஒரு அதிவேக போர்ஹேண்ட் ஷாட், அங்கிருந்த பறவையின் மீது மோதுவது போல் சென்றது. ஆனால், நல்வாய்ப்பாகப் பறவை கடைசி நேரத்தில் பறந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதைப் பார்த்த சேர் நடுவர் டிமோ ஜான்சென் உடனடியாக ஆட்டத்தை நிறுத்தி, அந்தப் புள்ளியை மீண்டும் விளையாடுமாறு உத்தரவிட்டார்.
நடுவரின் இந்த முடிவால் மெட்வெடேவ் சற்றே விரக்தியடைந்தார். பறவைகள் வந்து அமர்ந்தவுடனேயே நடுவர் ஆட்டத்தை நிறுத்தியிருக்க வேண்டும் என்றும், பறவை மீது பந்து மோதும் அளவுக்குச் சென்ற பிறகே ஆட்டம் நிறுத்தப்பட்டது ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் வாதிட்டார். மேலும், தனது யுஎஸ் ஓபன் வரலாற்றிலேயே நடந்த மிக விசித்திரமான சம்பவங்களில் இதுவும் ஒன்று என அவர் குறிப்பிட்டார்.
#DaniilMedvedev really reported the sparrow to the umpire 😭#USOpen 2026 👉 LIVE NOW on Star Sports and JioHotstar! pic.twitter.com/Sc1K7P4KFC
— Star Sports (@StarSportsIndia) September 2, 2026
“>
இந்த எதிர்பாராத இடையூறு மற்றும் கவனச்சிதறல் ஏற்பட்ட போதிலும், மெட்வெடேவ் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தார். இறுதியில் 6-1, 6-3, 7-5 என்ற நேர் செட்களில் கோர்ஸ்னியை வீழ்த்தி, 14 ஏஸ்களுடன் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
