அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து மேலதிகாரிகளிடம் முறையிட்ட அங்கன்வாடி ஊழியர் ஒருவரை, பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏழை எளிய குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக அரசு பல கோடிகளைச் செலவிட்டு வரும் நிலையில், சமைக்கவே முடியாத அளவுக்கு மோசமான தரத்தில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை அந்த ஊழியர் தைரியமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், தவறைச் திருத்துவதற்குப் பதிலாக, உண்மையை உரக்கச் சொன்ன ஊழியரின் குரலையே ஒடுக்கப் பார்க்கும் அதிகார வர்க்கத்தின் இந்தத் தலைகீழ் நடவடிக்கை, பொதுமக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்குச் சமைப்பதற்காகக் கொடுக்கப்பட்ட பட்டாணி மற்றும் தானியங்களை குக்கரில் வைத்து ஒன்பது, பத்து விசில் விட்ட பிறகும் கூட அவை வேகாமல் கல்லாகவே இருந்துள்ளன. தரமற்ற உணவுப் பொருட்களைக் கொண்டு சமைத்தால் குழந்தைகளின் ஆரோக்கியம் பாழாகிவிடும் என்ற அச்சத்தில், அந்தப் பெண் ஊழியர் உடனடியாக இதுகுறித்துத் தனது மேலதிகாரிகளுக்குப் புகாராகத் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் உண்ணும் உணவின் தரத்தில் சமரசம் செய்ய முடியாது என்ற நல்ல எண்ணத்தில் அவர் குரல் கொடுத்தபோதிலும், இந்த முறைகேட்டிற்குப் காரணமான ஒப்பந்ததாரர்கள் மீதோ அல்லது விநியோகஸ்தர்கள் மீதோ நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்குத் துணிச்சல் வரவில்லை.

மாறாக, நிர்வாகத்தின் குறைபாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததற்காக அந்த அங்கன்வாடி ஊழியரையே பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் தங்களின் அதிகார மமதையைக் காட்டியுள்ளனர். தவறு செய்தவர்களை விட்டுவிட்டு, நியாயத்தைக் கேட்ட ஊழியரைப் பழிவாங்கும் அதிகாரிகளின் இந்த உளுத்துப் போன நடவடிக்கை, அமைப்பின் சீர்கேட்டையே அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. ‘

மேலும் தவறைச் சுட்டிக்காட்டினால் தண்டனையா?’ என்று கேள்வி எழுப்பும் அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம், அந்த ஊழியரின் சஸ்பெண்ட் நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், தரம் குறைந்த உணவுப் பொருட்களை வழங்கி குழந்தைகளின் உயிரோடு விளையாடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

“>