ஆக்ரா நகரின் கமலா நகர் பகுதியில் ஆறுக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சேர்ந்து குரங்கு ஒன்றை துரத்தித் துரத்தி கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த அந்த குரங்கை சுற்றி வளைத்த வெறிநாய்கள் கொடூரமாகத் தாக்கியதில் அது பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த கோரச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் சிலர், நாய்களின் ஆக்ரோஷத்தைக் கண்டு அஞ்சி விலகி நின்றதுடன், அதனைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்து வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையால் தாங்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக, தெருக்களில் நடந்து செல்லும் பாதசாரிகள், முதியவர்கள் மற்றும் சிறுமிகள் மீது நாய்கள் பாய்ந்து கடிக்க வருவது அன்றாட நிகழ்வாக மாறிவிட்டதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
விலங்குகளுக்கே இந்த கதி என்றால், மனிதர்களின் பாதுகாப்பிற்கான உத்தரவாதம் என்ன என்ற கேள்வி இப்போது பலமாக எழுந்துள்ளது. இனியும் மௌனம் காத்தால் மனிதர்களுக்கும் இதுபோல் பெரிய ஆபத்து நேரிடலாம் என்பதால், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#आगरा: अगला शिकार कौन?
कमला नगर में आवारा कुत्तों के झुंड ने दिनदहाड़े एक बंदर को घेरकर मार डाला। हैरानी की बात यह रही कि पूरी घटना के दौरान लोग वीडियो बनाते रहे, लेकिन बंदर को बचाने की कोशिश नहीं हुई। अब सवाल सिर्फ वन्यजीव की मौत का नहीं, बल्कि रिहायशी इलाके में इंसानों की… pic.twitter.com/zcVk6kfFxA
— निशान्त शर्मा (भारद्वाज) (@Nishantjournali) August 7, 2026
தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த முறையான கருத்தடை மற்றும் தடுப்பூசி முகாம்களை அதிகாரிகள் உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் குரலாக உள்ளது. வெறும் கண்துடைப்பு நடவடிக்கைகளால் இந்த பிரச்சனையைத் தீர்க்க முடியாது என்பதால், குப்பைகளை அகற்றுவது மற்றும் விலங்கு நல அமைப்புகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
இந்தச் சம்பவம் மனித-விலங்கு மோதல்களையும், நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் தெருநாய்களின் அச்சுறுத்தலையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ள நிலையில், இனியாவது விழிப்புணர்வு ஏற்பட்டு உரிய தீர்வு காணப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது.
