ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றின் கழிமுகப் பகுதிகளில் மட்டும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் கிடைக்கக்கூடிய ‘புலசா’ எனப்படும் அரிய வகை மீன் ஒன்று புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் ரூ. 15,000 வரை ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த மீனின் அதிப்படியான விலைக்கு இதன் பிரத்யேக சுவை மற்றும் நறுமணம் மட்டுமல்லாமல், இதில் அடங்கியுள்ள எண்ணற்ற உடல்நல நன்மைகளுமே முக்கியக் காரணமாக விளங்குகின்றன.
இந்த வகை மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ரத்த நாளங்களில் கொழுப்புகள் தேங்குவதைத் தடுத்து ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ளப் பெரிதும் உதவுகிறது. மேலும், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைத்து மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்தான வியாதிகள் ஏற்படும் அபாயத்தைப் பெருமளவு குறைக்க உதவுவதோடு, மூளையின் நினைவாற்றலையும் கவனிக்கும் திறனையும் இது மேம்படுத்துகிறது.
இதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் டி, கால்சியம், பாஸ்பரஸ், லீன் புரோட்டீன் மற்றும் துத்தநாகம் போன்ற பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளதால் மூட்டு வலிகளுக்குச் சிறந்த நிவாரணம் கிடைப்பதோடு உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமும் பலப்படுத்தப்படுகிறது. ஆந்திரா மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இந்த மீனைச் சமைத்து உண்பதும், மற்றவர்களுக்குப் பரிசாக வழங்குவதும் தங்களின் கௌரவமாகக் கருதப்படுவதால் இதன் தேவை எப்போதும் மக்களிடையே அதிகமாகவே உள்ளது.
