தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவசர கால எச்சரிக்கைகளை விடுக்கவும் சமூக ஊடகங்கள் மிகச்சிறந்த ஊடகமாக மாறியுள்ளன. அந்த வகையில், இந்தியாவின் பல்வேறு மாநிலக் காவல்துறையினர் எக்ஸ் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் வழியாகப் பொதுமக்களிடம் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, உத்தராகண்ட் மாநிலக் காவல்துறை தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ, தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
மழைக்காலக் கடுமையான பொழிவினால், ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் அந்த வீடியோவில், நடு ஆற்றில் உள்ள ஒரு பெரிய பாறையின் மீது மூன்று சிறுவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். சுற்றிலும் தண்ணீர் ஆக்ரோஷமாகப் பாய்ந்து செல்லும் நிலையிலும், சற்றும் பயமின்றி அந்த மூன்று சிறுவர்களும் திடீரென ஆற்று வெள்ளத்திற்குள் குதிக்கின்றனர். பார்ப்பவர்களின் நெஞ்சை பதறவைக்கும் வகையில், அந்த வேகமான நீரோட்டத்திற்கு நடுவே அவர்கள் நீந்திச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
उफनती नदियों से दूरी ही सुरक्षा है।
नदी का तेज बहाव पलभर में जानलेवा हो सकता है। जोखिम न लें, सतर्क रहें। किसी को खतरनाक गतिविधि करते देखें तो तुरंत 112 पर सूचना दें।
🎥 Video Courtesy: Social Media#UttarakhandPolice #RiverSafety #MonsoonSafety #Dial112 #StaySafe pic.twitter.com/915lyQJv0a
— Uttarakhand Police (@uttarakhandcops) July 22, 2026
மழைக்காலங்களில் ஆறுகளின் வேகம் நொடிப் பொழுதில் மாறக்கூடியது என்பதால், இத்தகைய ஆபத்தான செயல்கள் மரணத்தை வரவழைப்பதாகும். எவ்வளவு சிறந்த நீச்சல் வீரர்களாக இருந்தாலும், காட்டாற்று வெள்ளத்தின் அசாத்திய வேகத்திற்கு முன்னால் தப்பிப்பது கடினம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த வீடியோவை விழிப்புணர்வுக்காகப் பகிர்ந்துள்ள உத்தராகண்ட் காவல்துறை, “பாதுகாப்பு என்பது பொங்கி வழியும் ஆறுகளில் இருந்து தள்ளி இருப்பதில் தான் உள்ளது. ஆற்றின் வலுவான நீரோட்டம் ஒரு நொடியில் உயிருக்கு ஆபத்தாக முடியும். தேவையற்ற ஆபத்துகளைத் தவிர்த்து விழிப்புடன் இருங்கள்” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், யாராவது இது போன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டால், உடனடியாக ‘112’ என்ற அவசர எண்ணிற்கு அழைத்துத் தகவல் தெரிவிக்குமாறும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த சமூக வலைத்தள வாசகர்கள், “தினமும் இவ்வளவு விபத்துகள் நடந்தும் இந்த முட்டாள்கள் பாடம் கற்பதில்லை” என்றும், தொடர்ந்து விடுக்கப்படும் எச்சரிக்கைகளையும் மீறி இளைஞர்கள் தங்களின் உயிரோடு விளையாடுவது வேதனை அளிப்பதாகவும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
