அமெரிக்காவில் பிரபலமான ‘த ராம்சே ஷோ’ நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ஒரு உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

56 வயதான ஓய்வுபெற்ற பெண்மணி ஒருவர், தனது 88 வயது தந்தை கடனில் தவிப்பதாகவும், அதை அடைக்க 55,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 52 லட்சம் ரூபாய்) பணம் கேட்பதாகவும், ஆனால் அதைத் தர தான் விரும்பவில்லை என்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளரிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.

இந்தத் தம்பதியினர் சுமார் 2 முதல் 3 மில்லியன் டாலர் வரை சொத்து வைத்திருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டாலும், அந்தப் பணம் அனைத்தும் தங்களின் ஓய்வுக்கால முதலீட்டில் முடங்கியுள்ளதாகவும், அதைத் தொடுவதற்கு அவர்கள் தயங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பெற்ற தந்தை என்று கூடப் பார்க்காமல், ஒரு பெரிய தொகையை வைத்துக்கொண்டு உதவ மறுக்கும் இவர்களின் மனப்பான்மை, இணையவாசிகளை குறிப்பாக இந்தியர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தச் செய்தி இந்திய நெட்டிசன்களிடையே பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “இத்தனை கோடி சொத்து வைத்திருந்தும், பெற்ற தந்தையின் கடன் சுமையைச் சுமக்கத் தயங்குவது மனிதநேயமற்ற செயல்” என்று பலரும் காட்டமாகப் பதிவிட்டு வருகின்றனர்.

“பெற்றோரை முதிய வயதில் கைவிடுவது, குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட வயதில் வெளியேற்றுவது என மேற்கத்திய கலாச்சாரம் குடும்ப உறவுகளின் அடித்தளத்தையே சிதைத்துவிட்டது. பணம் மட்டுமே வாழ்வின் இலக்காக மாறிப்போனது வருத்தமளிக்கிறது” என்று இந்தியக் குடும்ப விழுமியங்களுடன் ஒப்பிட்டுப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“>

 

ஒருபுறம், “சொந்தப் பணத்தைச் சேமிக்க உரிமை உண்டு, தந்தையின் கடன் பொறுப்பு அவருக்குரியது” என்று சில மேற்கத்திய ஆதரவு கருத்துகள் இருந்தாலும், இந்திய கலாச்சாரத்தில் பெற்றோர் மீது காட்டப்படும் அன்பும், நிதி ரீதியான கடப்பாடும் மேற்கத்திய நாடுகளை விட உயர்ந்தது என்பதை இந்த விவாதம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.

“இத்தகைய முன்னேற்றம் தேவையில்லை; எங்கள் கலாச்சாரமே சிறந்தது” என நெட்டிசன்கள் பதிவிட்டு வருவது இந்த விவாதத்தை மேலும் வலுவாக்கியுள்ளது.