இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான முதல் ஒரு நாள் போட்டியில், இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லரை அவுட் செய்ய இந்திய வீரர்கள் கையாண்ட விதம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து இன்னிங்ஸின் போது பிரசித் கிருஷ்ணா வீசிய ஆஃப் ஸ்டம்ப் பந்தை பட்லர் லெக் சைடில் அடிக்க முயன்றார். ஆனால், பந்து பேட்டின் எட்ஜில் பட்டு வானத்தில் உயரமாகப் பறந்தது. அப்போது மிட்-ஆஃப் திசையில் இருந்து சுப்மன் கில்லும், மிட்-ஆன் திசையில் இருந்து குர்னூர் பிராரும் பந்தைப் பிடிக்கக் கத்திக்கொண்டே ஓடி வந்தனர். கடைசி நொடியில் எதிர்பாராத விதமாக இருவரும் ஒருவரோடு ஒருவர் பலமாக மோதிக்கொண்டனர்.

“>

இந்த பயங்கர மோதலுக்கு மத்தியிலும் குர்னூர் பிரார் பந்தைக் கீழே விடாமல் கெட்டியாகப் பிடித்து மாஸ் காட்டினார். இருவரும் கீழே விழுந்ததைப் பார்த்து ரசிகர்கள் பதறிப்போன நிலையில், நல்ல வேளையாக இரு வீரர்களுக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. பட்லரின் இந்த முக்கிய விக்கெட்டைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி வெறும் 19 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த இந்த கேட்ச் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.