கல்விக்காகவும் எதிர்காலத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியேறி, விடுதிகளில் தங்கிப் படிப்பது என்பது மாணவர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான காலகட்டமாகும். வெளியிலிருந்து பார்ப்பதற்கு விடுதி வாழ்க்கை நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பது போலத் தோன்றினாலும், குடும்பத்தைப் பிரிந்து வாழும் தனிமையின் வலி இரவு நேரங்களில்தான் அவர்களுக்குப் புரியத் தொடங்குகிறது. இந்நிலையில், விடுதியில் தங்கிப் படிக்கும் பள்ளி மாணவர்களின் நெஞ்சை உலுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்கியுள்ளது.
View this post on Instagram
அந்த வீடியோவில், விடுதியில் உள்ள டெலிபோன் பூத்தில் மாணவர்கள் வரிசையாக நின்று தங்களது பெற்றோருடன் போனில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு சிறுவன் தனது தாயிடம் பேசும்போது, வீட்டின் நினைவாகக் கண்கள் கலங்கி அழுகிறான். கேமராவுக்காக இல்லாமல், தாயின் பாசத்திற்காக அவனது கண்களில் இருந்து வழியும் அந்த உண்மையான கண்ணீர், பார்ப்பவர்களின் இதயத்தை கலங்க செய்கிறது.
விடுதி வாழ்க்கை என்பது வெறும் படிப்போடு மட்டும் முடிந்துவிடுவதில்லை; அது மாணவர்களைத் தங்களது வேலைகளைத் தாங்களே செய்துகொள்ளும் சுயசார்புடையவர்களாகவும், மனவலிமை மிக்கவர்களாகவும் மாற்றுகிறது. காலையில் சீக்கிரம் எழுவது முதல் தங்களது பொருட்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வது வரை அனைத்தும் அவர்களைப் பக்குவப்படுத்துகிறது.
இருப்பினும், இந்த விடுதிப் பயணத்தின் ஆகக் கொடூரமான பகுதி, பாசமான குடும்பத்தை விட்டுப் பிரிந்திருப்பதுதான். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது விடுதி வாழ்க்கையின் பழைய நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். “விடுதி வாழ்க்கை ஒரு மனிதனை வலிமையாக்குகிறது என்பது உண்மைதான், ஆனால் அதே நேரத்தில் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும், பெற்றோரின் அன்பின் உண்மையான மதிப்பையும் அதுதான் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது” எனப் பலரும் உருக்கமாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
