உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான ஜிஜேந்திரா என்பவர், அரியானா மாநிலம் ரோக்டக் பகுதியில் தனது மனைவி மற்றும் 4 வயது மகள் சுரபியுடன் வசித்து வருகிறார்.

கடுமையான மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஜிஜேந்திரா, தினந்தோறும் குடித்துவிட்டு வந்து தனது மனைவியுடன் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்தச் சூழலில், நேற்று முன்தினம் இரவு போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அவர், தெருவில் நின்று கொண்டிருந்த தனது சொந்த மகள் சுரபி என்றும் பாராமல், அந்தப் பிஞ்சு குழந்தையை நடுரோட்டில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

இந்த நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரத் தாக்குதல் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பார்ப்போரை அதிர்ச்சியடையச் செய்து இணையத்தில் காட்டுத்தீயாய் பரவியது.

இக்காட்சிகளைக் கண்டு கொதித்தெழுந்த போலீஸார், எவ்வித புகாரும் இன்றி தாமாகவே முன்வந்து இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.

உடனடியாக ஆக்‌ஷனில் இறங்கிய காவல் துறையினர், பெற்ற மகளையே மிருகத்தனமாகத் தாக்கிய போதை தந்தை ஜிஜேந்திராவை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்ததுடன், இந்தச் சம்பவம் குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.