இன்றைய நவீன காலகட்டத்தில் பெரும்பாலான குழந்தைகள் கைப்பேசிகளிலும், கணினித் திரைகளிலும் தங்களின் நேரத்தைச் செலவழித்து வரும் நிலையில், காண்போர் அனைவரையும் தங்களின் கடந்த கால நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும் வகையிலான சிறுமி ஒருவரின் க்யூட் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், பள்ளி வளாகத்தில் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த மழையின் காரணமாக, அந்தப் பேருந்தின் அருகே சேறும் சகதியுமாக மழைநீர் தேங்கியுள்ளது. பேருந்தின் உள்ளே இருக்கும் மற்ற குழந்தைகள் அனைவரும் அதனை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, இந்த ஒரு சிறுமி மட்டும் எதைப் பற்றியும் கவலைப்படாமல், தேங்கியிருக்கும் அந்தச் சேற்றுத் தண்ணீரில் குதித்து ஆட்டம் போடுகிறாள்.

 

அவளது ஆடைகள் மற்றும் உடல் முழுவதும் சேறு பூசப்பட்டிருந்தாலும், அவளது முகத்தில் பிரதிபலிக்கும் புன்னகை, அந்தத் தருணத்தை அவள் எவ்வளவு ஆழமாக ரசித்து விளையாடுகிறாள் என்பதை  உணர்த்துகிறது. சிறுமியின் இந்தச் செயலைக் கண்டு அங்கிருந்தவர்கள் வியப்புடன் ரசிக்கின்றனர். சிறிது நேரத்திற்குப் பிறகு பேருந்திலிருந்து இறங்கி வரும் மற்றொரு குழந்தை, அவளை அந்தச் சேற்று நீரிலிருந்து வெளியே அழைத்து வர முயன்றபோதிலும், அந்தச் சிறுமி தனது கவலையற்ற ஆட்டத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறாள். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.