இந்திய கிரிக்கெட் அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரம் என்று கொண்டாடப்பட்டு, பின்னர் ஃபார்ம் அவுட், இளம் பெண்ணுடன் ஏற்பட்ட மோதல் என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கியவர் பிருத்வி ஷா. இவருடைய கிரிக்கெட் வாழ்க்கை ஒருபுறம் சரிவை சந்தித்தாலும், கடந்த மார்ச் மாதம் ஆகிருதி அகர்வால் என்பவருடன் இவருக்கு கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஆனால், தற்போது அந்த திருமண உறவும் முறிந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பு கிளம்பியுள்ளது. இருவருக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என்று ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தற்போது ஆகிருதி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு உருக்கமான பதிவு இந்த சந்தேகத்தை பலப்படுத்தியுள்ளது.

 


தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பிருத்வி ஷாவின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பதிவிட்டுள்ள ஆகிருதி, “நான் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டேன், இருந்தாலும் அமைதியாகவே இருந்தேன். உறவில் அடுத்த அடியை எடுத்து வைத்த பிறகும், இதுதான் உண்மை என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவரைப் பற்றி சோசியல் மீடியாவில் பரவிய அத்தனை வதந்திகளும், செய்திகளும் முற்றிலும் உண்மைதான்” என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிருத்வி ஷாவுடன் இருக்கும் அனைத்து புகைப்படங்களையும், நிச்சயதார்த்த புகைப்படங்களையும் அவர் தனது பக்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார். இந்த விவகாரம் குறித்து இரு தரப்பிலும் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றாலும், பிருத்வி ஷா செய்த துரோகத்தால் இவர்களின் நிச்சயதார்த்தம் முறிந்துவிட்டதாகவே நெட்டிசன்கள் பலமாக பேசி வருகின்றனர்.