பிரிட்டனின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த லோரி டென்மேன் என்ற பெண்மணி, கடந்த 2007-ஆம் ஆண்டு தனது தோழியுடன் இரண்டு மாதப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். பயணத்தின் போது வயிற்று உபாதைகள் ஏற்படக் கூடாது என்பதற்காக, அவர் அசைவ உணவுகளைத் தவிர்த்து தீவிர சைவ உணவுகளை மட்டுமே உட்கொண்டுள்ளார். இருப்பினும், பிரிட்டன் திரும்பிய சில காலத்திலேயே அவருக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படத் தொடங்கின.
கடந்த 2010-ஆம் ஆண்டில் அவரது உடலில் இருந்து ஒரு மீட்டர் நீளமுள்ள ‘நாடாப்புழு’ வெளியேறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆரம்பத்தில் மருத்துவர்கள் சோதனை செய்துவிட்டுப் பெரிய பாதிப்பில்லை எனக் கூறினாலும், சில ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்குக் கடுமையான வலிப்பு, மனநல பாதிப்புகள் மற்றும் உடம்பில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. உடலை தீவிரமாகப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது மூளையில் 38 ஒட்டுண்ணிப் புழுக்களின் முட்டைகள் இருப்பதைக்கண்டு உறைந்து போயினர்.
அசுத்தமான குடிநீர், சரியாகக் கழுவப்படாத பச்சைக் காய்கறிகள் மற்றும் சுகாதாரமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் மூலமாகவே இந்த ‘டேனியா சோலியம்’ என்ற நாடாப்புழுவின் முட்டைகள் மனித உடலுக்குள் நுழைகின்றன. இவை குடல் வழியாக ரத்தத்தில் கலந்து, இறுதியில் மூளையை அடைந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்தியாவில் நிலவும் சுகாதாரக் குறைபாடுகள் காரணமாக, ‘நியூரோசிஸ்டிசர்கோசிஸ்’ (Neurocysticercosis) எனப்படும் இந்த மூளை வீக்க மற்றும் வலிப்பு நோய் பாதிப்பு பரவலாகக் காணப்படுகிறது.
இந்த அபாயகரமான அனுபவத்திலிருந்து மீண்டு வந்துள்ள லோரி டென்மேன், “இந்தியா பார்க்க வேண்டிய மிக அழகான நாடுதான், ஆனால் அங்கு பயணிக்கும் போது சுகாதாரத்தில் அணுஅளவும் அலட்சியம் காட்டக் கூடாது” எனப் பிற நாட்டுப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் பயணிப்போர் எப்போதும் காய்ச்சிய அல்லது பாட்டில் குடிநீரைப் பயன்படுத்த வேண்டும் என்றும், சாலையோரக் கடைகளின் உணவுகள் மற்றும் பச்சைக் காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
