உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், மாணவர்களின் பாதுகாப்பைக் காற்றில் பறக்கவிட்டு, முறையான தீயணைப்பு வசதிகள் இன்றி இயங்கி வந்த தனியார் கோச்சிங் சென்டர்கள் (Coaching Centres) மீது ஆக்ரா காவல்துறை எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை தற்பொழுது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆக்ராவில் உள்ள பல முன்னணி கோச்சிங் சென்டர்களில் தீயணைப்புத் துறை மற்றும் போலீஸார் இணைந்து திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.

அப்போது, பல நிறுவனங்களில் அவசரக் காலத்திற்குப் பயன்படுத்த வைக்கப்பட்டுள்ள தீயணைப்பு உருளைகள் (Fire Extinguishers) அனைத்தும் காலாவதியாகி, முற்றிலும் உபயோகமற்ற நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவர்களின் உயிரை அடகு வைத்துப் பணம் சம்பாதிக்கும் நோக்கில் மட்டுமே இந்த நிறுவனங்கள் இயங்கி வந்தது அம்பலமாகியுள்ளது.

​இந்தச் சோதனையின் போது, விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்ட கோச்சிங் சென்டர் உரிமையாளர்களைக் கடுமையாக எச்சரித்த போலீஸார், “விதிமுறைகளை மதிக்காமல் நீங்களே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தால், உங்கள் தொழிலை இங்கு நடத்த விடமாட்டோம்” என்று முகத்திற்கு நேராகவே கறாராகக் கூறி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பாதுகாப்பு விதிகளை மீறிய கோச்சிங் சென்டர்கள் மீது கடுமையான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சில நிறுவனங்களுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் பல நகரங்களில் கோச்சிங் சென்டர்களில் நடந்த தீ விபத்துகளை மனதில் வைத்து, ஆக்ரா போலீஸார் எடுத்துள்ள இந்த முன்கூட்டிய அதிரடி நடவடிக்கை, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளதாகப் பெற்றோர்கள் மார்புதட்டிப் பாராட்டி வருகின்றனர்.