தற்போதைய ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அபாரமாக விளையாடி வரும் ஹென்ரிச் கிளாசன், மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்குத் திரும்பப் போவதில்லை என்பதை உறுதி செய்துள்ளார். 34 வயதான கிளாசன், கடந்த 2025 ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும், இந்த ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் 414 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள கிளாசனை, 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்காக மீண்டும் அணிக்கு அழைக்க வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் வலியுறுத்தியிருந்தார்.
இது குறித்து ஸ்போர்ட்ஸ் டுடே (Sports Today) ஊடகத்திற்கு கிளாசன் அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது, நிச்சயமாக இல்லை. எனது வாழ்வில் இது ஒரு புதிய அத்தியாயம். ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக்கில் ரோட்டர்டாம் அணியின் இணை உரிமையாளராகப் பொறுப்பேற்றுள்ளேன். கிரிக்கெட் விளையாட்டை உலகளவில் கொண்டு செல்வதிலேயே இப்போது எனது கவனம் உள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் எப்படி இவ்வளவு சிறப்பாக விளையாடுகிறீர்கள் என்ற கேள்விக்கு, “இதில் ரகசியம் எதுவும் இல்லை; நம்பிக்கைதான் காரணம். எனது இணை பங்குதாரர் ஃபாஃப் டூ பிளெசிஸைப் பாருங்கள். அவர் பழைய திராட்சை ரசத்தைப் போல வயதாக ஆக இன்னும் சிறப்பாக விளையாடி வருகிறார். லீக் போட்டிகளுக்கு வருவதற்கு முன்னதாக சில வாரங்கள் தீவிரமாகத் தயார்படுத்துகிறேன். இதனால் மனதளவில் புத்துணர்ச்சியுடன் களம் இறங்குகிறேன்,” என்றார்.
கிளாசன் அங்கம் வகிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நாளை (மே 3) ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள முக்கியமான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கிளாசனின் தற்போதைய ஃபார்ம் கே.கே.ஆர் அணிக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
