மும்பை வொர்லி பகுதியில் பாஜக பேரணி காரணமாக ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா அமைச்சர் கிரிஷ் மகாஜனைப் பெண் ஒருவர் நேருக்கு நேர் தட்டிக் கேட்ட வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவியது. இதைத் தொடர்ந்து, அந்தப் பெண் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துவிட்டதாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகின.

 

தற்போது இந்த விவகாரத்தில் மும்பை காவல்துறை அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. “அந்தப் பெண் மீது இதுவரை எந்த எப்ஐஆரும் பதிவு செய்யப்படவில்லை. அதிகாரப்பூர்வ தகவல்களைச் சரிபார்க்காமல் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்” எனப் போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இருப்பினும், அந்தப் பெண் காவல்துறையினரை அவமரியாதை செய்ததாகக் கூறி, ஜென் சதாவர்த்தே என்பவர் வொர்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அமைச்சரைத் தட்டிக் கேட்ட அந்தப் பெண்ணின் செயல் ஒருபுறம் பாராட்டுகளைப் பெற்றாலும், மறுபுறம் அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருப்பது மும்பையில் பேசுபொருளாகியுள்ளது.