தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியல் அக்கட்சிக்குள்ளேயே பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வான கருணாநிதிக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
அவருக்குப் பதிலாக மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தனக்கு மீண்டும் சீட் கிடைக்கும் என மலைபோல நம்பியிருந்த கருணாநிதி, ஏமாற்றமடைந்த கையோடு தனது பகுதிச் செயலாளர் பதவியை இன்று அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். “என்னப்பா இது… தி.நகர்ல இப்படி ஒரு ட்விஸ்ட்டா?” என உடன்பிறப்புகளே ஷாக் ஆகிக் கிடக்கின்றனர்.
தனது ராஜினாமா கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிக உருக்கமான சில வரிகளை அவர் எழுதியுள்ளார். “பல ஆண்டுகாலம் நேர்மையாகவும் கடுமையாகவும் உழைத்தேன், ஆனால் அந்த உழைப்பிற்கு இப்போது மதிப்பில்லாத காரணத்தால் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என அவர் குறிப்பிட்டிருப்பது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இதைப்பார்த்த நெட்டிசன்கள், “சீட் கிடைக்கலன்னு மனுஷன் ரொம்பவே அப்செட் ஆயிட்டாரு போலயே!” என கமெண்டுகளைத் தட்டி வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில், சென்னைக்குள்ளேயே ஒரு முக்கிய நிர்வாகி இப்படி அதிரடி முடிவெடுத்திருப்பது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
