உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், ரயில்வே லோகோ பைலட் ஒருவர் தனது உயர் அதிகாரி விடுப்பு தர மறுத்ததால், வேறு வழியின்றி தனது அறுவை சிகிச்சை காயத்தை நேரில் காட்ட பேண்ட்டை கழட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜேஷ் மீனா என்ற அந்த லோகோ பைலட், கடந்த பிப்ரவரி 22-ம் தேதி மூல நோய் (Piles) அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருந்துள்ளார். காயம் இன்னும் ஆறாத நிலையில் வலியால் துடித்த அவர், தனது விடுப்பை நீட்டிக்கக் கோரியபோது, அவரது உயர் அதிகாரி ரத்தன் குமார் ஆதாரத்தைக் கேட்டு விடுப்பை நிராகரித்துள்ளார்.

இதனால் ஆத்திரமும் விரக்தியும் அடைந்த ராஜேஷ் மீனா, நேராக அதிகாரியின் அலுவலகத்திற்குச் சென்று மருத்துவச் சான்றிதழ்களைக் காட்டியும் பலன் இல்லாததால், சக ஊழியர்கள் முன்னிலையிலேயே தனது பேண்ட்டை கழற்றி இன்னும் ஆறாமல் இருக்கும் அறுவை சிகிச்சை காயத்தைக் காட்டியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், அந்தப் பைலட்டின் நிலையைப் பார்த்து நெட்டிசன்கள் ரயில்வே நிர்வாகத்தை வறுத்து எடுத்து வருகின்றனர்.

இவ்வளவு நடந்த பிறகும் அந்த அதிகாரி விடுப்பு தரவில்லை என்றும், பின்னர் தொழிற்சங்கத் தலைவர்கள் தலையிட்ட பிறகே அவருக்கு லீவு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.