மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள ஒரு காய்கறி சந்தையில், பட்டப்பகலில் ரயில்வே மூத்த பொறியாளர் ஒருவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்கா பகுதியில் உள்ள சுவிதா மார்க்கெட்டிற்கு பொருட்கள் வாங்க வந்த அந்த அதிகாரியை, அங்கிருந்த கூட்டத்திற்கு நடுவே ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாகத் தாக்கியுள்ளது.

அங்கிருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடிய நிலையில், அந்த அதிகாரி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இந்த ஒட்டுமொத்த பயங்கரமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அதில் மர்ம நபர் ஒருவர் கையில் கத்தியுடன் அதிகாரியை நோக்கி ஓடிவந்து குத்திவிட்டு தப்பிச் செல்வது தெளிவாகத் தெரிகிறது. காயமடைந்த பொறியாளர் தற்போது தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வீடியோ காட்சிகளை வைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்தத் துணிகரச் சம்பவம் ஜபல்பூர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.