இந்திய ரயில்களில், குறிப்பாக ஸ்லீப்பர் மற்றும் பொதுப் பெட்டிகளில் நிலவும் கூட்ட நெரிசல் பற்றிச் சொல்லவே வேண்டாம். சமீபத்தில் வைரலாகி வரும் வீடியோவில், ஸ்லீப்பர் கோச்சில் காலடி எடுத்து வைக்கக்கூட இடமில்லாத அளவுக்குக் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதைப் பார்த்த பயணி ஒருவர், அங்கிருந்த டிடிஇயிடம் ஆவேசமாகக் கேள்வி எழுப்புகிறார்.

“டிக்கெட்டே இல்லாதவர்கள் எல்லாம் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். கன்பார்ம் டிக்கெட் எடுத்த எங்களால் நிம்மதியாக உட்காரக்கூட முடியவில்லை. கழிவறைக்குக்கூடச் செல்ல முடியாத அளவுக்குக் கூட்டம் இருக்கிறது.

சீட்டே இல்லாதபோது ஏன் இவ்வளவு புக்கிங் எடுக்கிறீர்கள்? ரயில்வே நிர்வாகம் என்னதான் செய்கிறது?” என்று அவர் சரமாரியாகக் கேள்வி கேட்டார்.

இதற்குப் பதில் அளித்த டிடிஇ, “நிர்வாகம் எடுக்கும் முடிவுகளில் நான் ஒன்றும் செய்ய முடியாது. டிக்கெட் இல்லாதவர்களுக்கு அபராதம் விதிப்பதுதான் என் வேலை. வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் எடுத்தவர்களும் ஏறிவிடுவதால் தான் இந்தக் கூட்டம்” என்று அமைதியாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ரயில்வே துறை இதற்குப் பதிலளித்துள்ளது. பயணியின் மொபைல் எண் மற்றும் பிஎன்ஆர் (PNR) எண்ணைக் கேட்டுள்ள ரயில்வே அதிகாரிகள், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.

ஆனாலும், முன்பதிவு செய்த பயணிகளின் வசதியை உறுதி செய்ய கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.