பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், விளைநிலத்தில் புகுந்த பாம்பை ஒரு சிறுவன் பொம்மையைப் போல கையாண்டு, தூக்கி வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எக்ஸ் (X) தளத்தில் (@Babaxwale) பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், சிறுவன் ஒருவன் தனது விளைநிலத்திற்குள் புகுந்த பாம்பை எவ்வித அச்சமுமின்றி எதிர்கொள்கிறான். வழக்கமாகப் பெரியவர்களே பாம்பைக் கண்டால் அலறியடித்து ஓடும் சூழலில், அந்தச் சிறுவன் மிக லாவகமாகப் பாம்பின் வால் பகுதியை ஒரு கையால் பிடித்துச் சுழற்றுகிறான்.

சிறுவன் பாம்பைப் பிடிக்க முயலும்போது, அந்தப் பாம்பு தனது தலையைத் தூக்கி (படம் எடுத்து) சிறுவனைத் தாக்கப் பலமுறை முற்படுகிறது. இருப்பினும், அந்தச் சிறுவன் மின்னல் வேகத்தில் செயல்பட்டு பாம்பின் பிடியில் சிக்காமல், அதைத் தரையோடு தரையாகத் தேய்த்து விளைநிலத்திற்கு வெளியே தூக்கி வீசுகிறான்.

இதை  பார்த்த ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். “இந்தச் சிறுவன் பாம்பை விடவும் ஆபத்தானவனாக இருக்கிறான்”, “பயம் என்றால் என்னவென்றே இவனுக்குத் தெரியாது போல” என்று ஒரு தரப்பினர் சிறுவனின் துணிச்சலைப் பாராட்டினாலும், “இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுகள் உயிரைப் பறித்துவிடும்; இதை ஒருபோதும் ஊக்கப்படுத்தக் கூடாது” என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கண்டெண்ட் மற்றும் சாகசத்திற்காக உயிரைப் பணயம் வைத்துச் சிறுவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது பெற்றோர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.