குருகிராமில் கடந்த  புதன்கிழமை காலை சைக்கிள் ஓட்டிச் சென்ற 58 வயது தொழிலதிபர் கார் மோதியதில் உயிரிழந்தார். கார் ஓட்டுநர் விபத்துக்குப் பிறகு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

அதாவது DLF கட்டம்–II உயர்நிலைப் பகுதியில் மனைவி ரிது ஜெயினுடன் வசித்து வந்த தொழிலதிபர் ஜெயின், அன்றாடம் போல தனது காலனியின் உள் பாதையில் புதன்கிழமை காலை 7.14 மணியளவில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது டெல்லி பதிவு எண்ணைக் கொண்ட வெள்ளை ஹூண்டாய் சாண்ட்ரோ கார் பின்னால் இருந்து வந்து அவர் மீது மோதியது.

 

விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஆம்புலன்சில் ருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். ஜெயினின் மகன் லண்டனிலும் மகள் பெங்களூருவிலும் வசித்து வருவதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இந்த நிலையில் “கார் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். போலீஸார் அவரது இல்லத்தில் தேடுதல் நடத்தியபோதும் அவர் கிடைக்கவில்லை. அவர் தற்போது தப்பித்து வருகிறார். விரைவில் கைது செய்வோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் இருந்த பல சிசிடிவி கேமரா காட்சிகளில், ஜெயின் சைக்கிளை பக்கவாட்டில் ஓட்டி சென்றபொழுது, கார் திடீரென திசை மாறி பின்னால் இருந்து நேரடியாக மோதியது தெளிவாகப் பதிவாகியுள்ளது. அந்த இடத்தில் அவரது சைக்கிள் சிதைந்த நிலையில் கிடந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

“கார் ஓட்டுநர் அருகிலுள்ள பார்ட்டி அல்லது பப்பிலிருந்து மதுபோதையில் திரும்பி வந்திருக்கலாம் என ஆரம்ப சந்தேகம் உள்ளது. ஆனால் ஓட்டுநரை கைது செய்த பின்பே முழு விபரம் தெரியும்,” என போலீஸ் தெரிவித்துள்ளது. ஜெயினின் உறவினர் காந்தி ஜெயின் அளித்த புகாரின் பேரில், சம்பவத்தில் ஈடுபட்ட ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, ஜெயினின் மகன் லண்டனில் இருந்து திரும்பிய பின் உடல் குடும்பத்தினரிடம் தகனத்திற்காக ஒப்படைக்கப்பட்டது.