மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த ஒரு கார் உரிமையாளர், தான் புதிதாக வாங்கிய மஹிந்திரா தார் (Mahindra Thar) ரக காரில் ஏற்பட்ட தொடர்ச்சியான தொழில்நுட்பக் கோளாறுகளைக் சரிசெய்யவில்லை என்று கூறி, டீலர்ஷிப்புக்கு (Showroom) முன்னால் ஒரு நாடகத்தனமான போராட்டத்தை அரங்கேற்றியுள்ளார்.

வக்கத் (Wakad) பகுதியில் வசிக்கும் கணேஷ் சங்கடே என்ற அந்த உரிமையாளர், தனது காரைக் கழுதைகள் பூட்டிய கயிற்றால் கட்டி இழுத்து வந்துள்ளார். இந்த வினோதமான காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சங்கடே, சில மாதங்களுக்கு முன்பு வாங்கிய இந்தத் ‘தார்’ SUV காரில், தண்ணீர் கசிவு, அதிகப்படியான எரிபொருள் செலவு, கார் சீக்கிரமாகத் துருப்பிடித்தல் மற்றும் அதிக என்ஜின் இரைச்சல் போன்ற பல பிரச்சனைகள் இருந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

பலமுறை சர்வீஸுக்குக் கொடுத்தும் பிரச்சனை தீரவில்லை என்பதால், ஆத்திரமடைந்த அவர், தார் காரைக் கழுதைகள் இழுக்கும் வாகனமாக மாற்றிக் கொண்டு, மேளதாளத்துடன் டீலர்ஷிப் முன் வந்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

இந்தச் செயல், வாகனத் துறையில் உள்ள விற்பனைக்குப் பிந்தைய வாடிக்கையாளர் சேவை (After-sales service) தரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.