ஈரோடு மாவட்டம் பவானி அருகே லட்சுமிநகர் பகுதியில் இரவு நேரத்தில் தூங்கிக்கொண்டிருந்த தம்பதியரிடம் இருந்து 2 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், மனைவி கீர்த்தனாவுடன் தங்களது உறவினர்களுடன் இணைந்து பவானி அடுத்த லட்சுமிநகர் பகுதியில் உள்ள மேம்பாலத்துக்கு அடியில் தற்காலிக கூரை அமைத்து தங்கி பணிபுரிந்து வந்தனர். இத்தம்பதிக்கு 2 வயது பெண் குழந்தை உள்ளது.

நேற்றிரவு வழக்கம்போல் பணிகளை முடித்துக்கொண்டு மூவரும் தற்காலிக கூரையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு, அப்பகுதிக்கு வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல், தூங்கிக்கொண்டிருந்த பெற்றோரின் அருகிலிருந்து சிறுமியை நைசாக தூக்கிச் சென்றதாக கூறப்படுகிறது.

நள்ளிரவு 3 மணியளவில் விழித்த பெற்றோர், குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அருகிலுள்ளவர்கள், “3 பேர் சிறுமியை தூக்கிச் செல்வதை கண்டோம்” என தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறுமியை மீட்கும் பணியை போலீசார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். தம்பதியரின் தற்காலிக தங்குமிடத்தில் இருந்து குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.