உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் நடந்த நிகழ்வை மையமாக கொண்டு, அலகாபாத் உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.

ஜிம் பயிற்சியாளரான நிதின் சைனி என்பவர், ஒரு பெண் வாடிக்கையாளருக்கு சாதியை கூறி  இழிவான வார்த்தைகள் பேசியதோடு, ஆபாசமான வீடியோ அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, பெண்கள் பாதுகாப்பு மற்றும் மரியாதைக்கு எதிரான செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதால், உடற்பயிற்சி கூடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என நீதிபதி சேகர் குமார் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் நடந்ததாக கூறப்படுகிறது. சைனி மீது எஸ்சி/எஸ்டி சட்டம் மற்றும் ஐபிசி பிரிவு 354, 504 ஆகியவை பின் பற்றப்பட்டுள்ளன.

இந்த வழக்கில், விசாரணை அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டாரா? அந்த உடற்பயிற்சி கூடம் பதிவு செய்யப்பட்டதா? அந்த இடத்தில் பெண் பயிற்சியாளர்கள் உள்ளனரா? என்ற தகவல்களைச் சாட்சி ஆவணமாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி கூடங்களில் ஆண்கள் பயிற்சியாளர்களாக இருப்பது வழக்கமாக இருந்தாலும், பெண்கள் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்படுவதில் தெளிவான தேவை உள்ளது என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.