திரைப்படங்களை மிஞ்சும் வகையில், கடந்த 6 ஆண்டுகளாக அமைதியாக நடைபெற்று வந்த மெகா மோசடி ஒன்று தற்போது வெடித்துள்ளது. “இருடியம் வணிகத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும்” என நம்ப வைக்கப்பட்டு, ரிசர்வ் வங்கி பெயரில் போலி ஆவணங்கள் மூலம் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இந்த மோசடி தொடர்பாக முதலில் மத்திய அரசின் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, சிபிசிஐடி தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்தது. வழக்கின் விசாரணை சேலம் சிபிசிஐடி குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த மோசடி தமிழகத்தின் பல மாவட்டங்களில் அரங்கேறியது  அம்பலமானது.

இதற்காக RBI அதிகாரிகள் போல் நடிக்க வடஇந்தியர்களும், கேரளாவைச் சேர்ந்தவர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். ரிசர்வ் வங்கியின் பெயரில் ஆயிரக் கணக்கான கோடிகளுக்கான போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு மக்களை ஏமாற்றி, மத்திய அரசு ரகசியமாக இருடியம் விற்றுவருவதாக கூறி குறைந்த முதலீட்டுக்கு அதிக லாபம் என்று நம்ப வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஆளும் அரசு இடையே தொடர்பு உள்ளதென போலி அனுமதி சீட்டுகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மதுரை மாவட்டம் மெய்யனூத்துப்பட்டி பகுதியில் இந்த மோசடியின் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் சிலரை போலீசார் கண்காணித்து வந்தனர். அதன் அடிப்படையில் நடத்திய அதிரடி வேட்டையில், உதவி பேராசிரியர், அறக்கட்டளை நிர்வாகி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ‘பங்கு ஒளி’ எனப்படும் அறக்கட்டளையின் நிர்வாகி ஜோசப்புக்கு முக்கிய பங்கு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

தற்போது, தமிழகத்தில் மட்டும் ஏமாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 750 என்று கூறப்படுகிறது. இவர்களில் 100 பேரிடம் சிபிசிஐடி போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதோடு, சொத்துகள் முடக்கம் செய்யும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக வட மாநிலங்களை சேர்ந்த மேலும் பலரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு வருகின்றனர்.

இதனால்தான், “இப்படியும் நடக்குமா?” என ஆச்சரியப்படும் அளவிற்கு, பொதுமக்களிடம் நம்பிக்கையை துரோகம் செய்த மிகப் பெரிய மோசடி வழக்காக இது உருவெடுத்து வருகிறது. பொதுமக்கள் எதிர்காலத்தில் இந்த மாதிரியான மோசடிகளிடம் விழித்திருப்பது அவசியமாகி விட்டது.