கள்ளக்குறிச்சி மாவட்டம் செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது உறவினர்கள் சேகர், மோகன் இவர்களுக்கும் அதே ஊரைச் சேர்ந்த சக்திவேல், செல்வராஜ் குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தில் மாடு மேய்ந்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இருதரப்பைச் சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இதில் மோகன், ஏழுமலை, சேகர் சக்திவேல் ஆகிய நான்கு பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. நான்கு பேரும் நள்ளிரவு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களை பார்க்க மருத்துவமனைக்கு வந்த இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நள்ளிரவு சண்டை நடந்ததால் பணியில் இருந்த மருத்துவர்களும் நோயாளிகளும் அலறியடித்துக் கொண்டு ஓடும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று தகராறு செய்தவர்களை மருத்துவமனையை விட்டு வெளியேற்றினர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இருதரப்பை சேர்ந்த ஆறு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.