பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம், 1969 (RBD Act) இன் 2023 திருத்தத்தின் அடிப்படையில், குழந்தைகள் பிறக்கும் போதே உடனடியாகப் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கடந்த அக்டோபர் 1, 2023 முதல் நாடு முழுவதும் பிறப்புகள் மற்றும் இறப்புகள் மத்திய அரசின் ஒருங்கிணைந்த பதிவு தளமான CRS Portal-இல் கட்டாயமாகப் பதிவாக வேண்டும் என்றது.

இந்தத் திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக, மத்திய அரசு கடந்த ஜூன் 12, 2025 அன்று அனைத்து மாநில அரசுகளுக்கும் புதிய உத்தரவு அனுப்பியுள்ளது. அதில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமூக சுகாதார மையங்கள் போன்றவை, குழந்தை பிறந்தவுடன் தாயாரை டிஸ்சார்ஜ் செய்யும் முன்பே பிறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும் எனக் கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை மூலம், பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் தவிர்க்கப்படும் என அரசு நம்பிக்கை தெரிவிக்கிறது. தற்போது நடைமுறையில், பிறப்புப் பதிவு செய்யப்பட்டு 7 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். எனினும், RGI அலுவலக கணிப்பின் படி, 10% குழந்தைகளுக்கு சான்றிதழ் தாமதமாக கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய சூழலில், பிறப்புச் சான்றிதழ் மிகவும் முக்கிய ஆவணமாக மாறியுள்ளது. கல்வி சேர்க்கை, அரசு வேலை, பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, சொத்துப் பதிவு, திருமண பதிவு உள்ளிட்ட அனைத்து விதமான சேவைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. எனவே, மருத்துமனையிலேயே சான்றிதழ் வழங்கும் நடைமுறை, குடிமக்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, அத்தியாவசிய ஆவணங்களை உடனடியாகப் பெற உதவுமென மத்திய அரசு தெரிவித்துள்ளது.