பாமக கட்சியில் உள்கட்சி மோதல் சில மாதங்களாக நடந்து வருகிறது. அதில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி புதிய நபர்களை நியமித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது, செய்தியாளர்கள் எந்த கேள்விகளை எழுப்பினாலும் பதில் அளிக்க தயாராக உள்ளேன். எனக்கு அன்புமணி மன்னிப்பு கேட்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த கட்சியில் நான் கூறியதுதான் நடக்க வேண்டும்.

கட்சி தொடங்கிய நாள் முதல் என்னோடு பயணித்தவர்களுக்கு பதவிகள் வழங்கியுள்ளேன். அதாவது கலைஞர் பானியில் சொல்லப்போனால், என் மூச்சை இருக்கும் வரை நான் தான் பாமகவிற்கு தலைவர் அன்புமணி செயல்தலைவர்தான். கலைஞர் இருக்கும்வரை திமுகவில் மு.க. ஸ்டாலின் எந்த ஒரு முணுமுணுப்பையும் செய்யவில்லை.

மேலும் நான் நியமித்த அனைவருமே நிரந்தர பொறுப்பாளர்கள். எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு அந்த முடிவு இதுவரை வரவில்லை. மேலும் 60-வது மணி விழாவிற்கு அன்புமணி வராதது மிகவும் வருத்தமான மனநிலையை ஏற்படுத்தியது என கூறினார்.

மேலும் முருக பக்தர் மாநாடு குறித்த கேள்விக்கு, பெரியாரையும், அண்ணாவையும் விமர்சித்து வீடியோ வெளியிடப்பட்டது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாகும். பொதுக்குழு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தேர்தல் நெருங்கும் சமயத்தில் பாமக கட்சியின் பொதுக்குழு நடைபெறும் அந்த பொதுக்குழு கூட்டத்தில் தான் கூட்டணி குறித்த முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.