
சென்னை மாவட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஜூன் 24ஆம் தேதி விடுதலை சிறுத்தை கட்சிகளின் 2025 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
அந்த விழாவில் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியபோது கூறியதாவது, முருகன் தமிழ் கடவுள் என எல்லோரும் கூறினால் அவரது அப்பன் சிவனும் தமிழ் கடவுளாகத்தானே இருக்க வேண்டும்.
அப்படி என்றால் சிவன், பார்வதி இருவருமே தமிழர்கள் தான். மேலும் அவர்கள் கைலாய மலையில் இருக்கிறார்கள் எனில் கைலாயமும் தமிழர்களின் தேசம் தானே. இதன்மூலம் கைலாயம் முதல் கன்னியாகுமரி வரை தமிழன் தான் வாழ்ந்தான் என்பதற்கு சிவபெருமான் ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு.
எங்களுடைய அடையாளங்களையும், வரலாறுகளையும் திருடிக் கொண்டு புதிய புதிய விளக்கங்களை கொடுத்து எங்களை பிளவுபடுத்தி சிதறடித்து வைத்துள்ளார்கள். இதனை அம்பேத்கரின் பிள்ளையாக இருந்து கொண்டு எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும்?.
நாங்கள் கூட்டணி கொண்டிருப்பது பாராளுமன்றத்தில், சட்டமன்றத்தில் சீட்டு பேரம் பேசுவதற்கு அல்ல. இப்படியே சென்று கொண்டிருந்தால் என்றைக்காவது ஒருநாள் தேர்தல் பாதையே வேண்டாம் என நான் சொல்லி விடுவேன்.
அந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு என்னுடன் வாருங்கள் என போய்க்கொண்டே இருப்பேன். அவர்கள் நம்மை சராசரியாக எடை போட்டு விட்டார்கள் அவர்களது சீட்டிற்காகவும், நோட்டிற்காகவும் என நினைத்துக் கொண்டார்கள். அதுதான் அவர்கள் புத்தி. இவ்வாறு அவர் கூறினார்.