
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜெய்பாபாய் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கணபதிபாளையம் அரசு பள்ளி மாணவிகளுக்கிடையே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் காரணமாக மோதல் ஏற்பட்டுள்ள சம்பவம் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்பாபாய் பள்ளி மாணவிகள் சிலர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோக்கள் பதிவிட்டு வந்த நிலையில், அதே பகுதிக்கு அருகில் உள்ள கணபதிபாளையம் பள்ளி மாணவிகளிடமும் போட்டி நிலை உருவாகியது.
இந்த தகராறு கடந்த சில நாட்களாகவே இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், நேற்று மாலை ஜெய்பாபாய் பள்ளி முடிந்து மாணவிகள் பேருந்தில் சென்று, சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள கணபதிபாளையம் பள்ளியின் முன்பாக நேரடியாக சண்டையில் ஈடுபட்டனர். ரீல்ஸ் போடுவதில் உன் ஆளு பெரிய ஆளா? என் ஆளு பெரிய ஆளா? என இரண்டு பள்ளி மாணவிகளும் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
சாலையின் நடுவே நேரிட்ட இந்த மோதல், அந்த வழியாக சென்ற பொதுமக்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீரபாண்டி காவல் துறையினர் விரைந்து சென்று மாணவிகளை சமாதானப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழகம் மூலமாக இரு பள்ளி நிர்வாகங்களும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளன.
மாணவிகள் இளம் வயதினராவதால் வழக்குப் பதிவு செய்யப்படாமல் பெற்றோரின் ஒத்துழைப்புடன் இந்த விவகாரம் சமாதானப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த மோதல் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவியதையடுத்து, பள்ளி மாணவர்களில் சமூக ஊடக பயன்பாடு தொடர்பாக பல கேள்விகள் எழுந்துள்ளன.