உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் சிக்கந்தரா பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில், பாரம்பரிய உடையுடன் பெண்கள் குழுவாக நடனமாடி கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் குழந்தைகள் மற்றும் ஆண்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில், எதிர்பாராதவிதமாக, வேகமாக வந்த ஒரு மாருதி ஈக்கோ கார் அந்த நடனக் குழுவின் மீது நேரடியாக மோதியது. இந்தக் காட்சிகள் சிசிடிவி மற்றும் கைபேசி வீடியோவில் பதிவு செய்யப்பட்டு தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

இந்தக் கோர விபத்தில் 6 பேர் வரை படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். திருமண மகிழ்ச்சியாக தொடங்கிய நிகழ்வு, ஒரு கணத்தில் அலறல் மற்றும் பதட்டமாக மாறியது. சம்பவம் நடந்த சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்யப்படாததால் இது போன்ற சம்பவம் நேர்ந்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஆக்ரா காவல் ஆணையரகம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட சிக்கந்தரா காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு (SHO) கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

சம்பவத்துக்குப் பிறகு தப்பியோடிய காரோட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம், பொதுநிகழ்ச்சிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.