தெலுங்கானா மாநிலம் மக்பூப்நகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில், பாம்புகள் சுதந்திரமாக சுவரோடு சுவராக ஊர்ந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் காட்சிகள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி மாணவர்களிடையே அதிர்ச்சியையும், பாதுகாப்பு குறைபாடுகளையும் வெளிக்கொணர்ந்துள்ளன. ஹாஸ்டல் வளாகத்தின் நடுக்கூடங்கள், மாடிப்படிகள், வராண்டா உள்ளிட்ட பகுதிகளில் பாம்புகள் ஊர்ந்து செல்லும் வீடியோக்கள் தற்போது வைரலாகியுள்ளது.

இந்த சூழலில், ஹாஸ்டலில் தங்கியுள்ள மாணவர்கள் மிகவும் அச்சத்துடன் தங்களது அறைகளில் தங்கியிருக்கின்றனர். இரவு நேரங்களில் ஹாஸ்டலின் பொதுப் பகுதிகளில் செல்வதை மாணவர்கள் தவிர்த்து வருகின்றனர்.

இந்த சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் மாணவர்களின் உயிர் பாதுகாப்புக்கு உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி நிர்வாகத்தை கடுமையாக வலியுறுத்தி வருகின்றனர்.

மாணவர்கள் வலியுறுத்தும் கோரிக்கைகளில், அனுபவமிக்க பாம்பு பிடிப்பவர்களை அழைத்து பாம்புகளை பாதுகாப்பாக அகற்ற வேண்டும், ஹாஸ்டல் வளாகத்தை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், மற்றும் பாம்புகள் உள்ளே புகும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட வேண்டும்.

சமூக வலைதளங்களிலும் “இந்த பாம்பு ரகமா என்னவோ தெரியலை… இவ்வளவு பெரிய பாம்பு பார்த்ததே இல்ல” என்ற வகையில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த பல்வேறு விமர்சனங்கள் பதிவாகி வருகின்றன.