மனிதநேயத்தின் எல்லைகளையும் மீறிய கொடூரமான சம்பவம் ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. கால்நடை கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில், இரண்டு தலித் இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்டதோடு, அவர்களது தலைகளில் பாதி மொட்டையடித்து முழங்கால் போட்டு ஆடு மாடு போன்றே இரண்டு கிலோமீட்டர்  நடக்க வைத்தனர். இது மனிதகுலத்தையே கலங்கவைக்கும் வகையில் உள்ளது. சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி மாவட்ட நிர்வாகத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கஞ்சம் மாவட்டத்தில் உள்ள சிங்கிபூர் கிராமத்தைச் சேர்ந்த புலு நாயக் மற்றும் பாபுலா நாயக் என்ற இருவரும், ஜூன் 23ஆம் தேதி, தங்கள் மகளின் திருமணத்திற்காக மூன்று பசுக்களை வாங்கி ஹரிபூர் கிராமத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கரிகும்மா கிராமத்தைச் சேர்ந்த சிலர் அவர்கள் மீது கால்நடை கடத்தல்காரர்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டுடன் தாக்குதல் நடத்தினர். பணம் கேட்டும் வழங்க மறுத்ததால், அவர்கள் இருவரையும் கொடூரமாக அடித்து, ஒரு சலூனுக்குள் அழைத்து சென்று தலைமுடியை பாதியாக மொட்டை அடித்து, புல் தின்னச் செய்ததும், வடிகாலில் உள்ள சாக்கடை தண்ணீரைக் குடிக்க வைத்ததும், அடுத்து ஜஹாரா கிராமம் வரை முழங்காலில் நடக்க கட்டாயப்படுத்தியதும் வன்முறையின் எல்லையை காட்டுகின்றன.

பாதிக்கப்பட்டவர்கள் தாராகோட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை ஆரம்பித்துள்ளனர். இந்த தாக்குதலில் 7–8 பேர் தொடர்புடையதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார், மற்றவர்களைத் தேடும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். தலையில், முதுகில் மற்றும் முழங்கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கஞ்சம் மாவட்ட நிர்வாகம் இந்தச் சம்பவத்தை வெட்கப்பட வேண்டிய காட்டுமிராண்டித்தனமாக குறிப்பிட்டு, “இது எந்த நாகரிக சமூகத்திற்கும் ஏற்றது அல்ல. குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது” என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் சமூக நீதிக்காக போராடுபவர்கள் இந்த சம்பவத்தை கண்டித்து, உடனடி நடவடிக்கையை கோரியுள்ளனர்.