
சென்னை மாவட்டம் மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் கலையரசன். இவர் கூறியவர் நிறுவனத்தில் டெலிவரி வேலை பார்த்து வந்தார். கடந்த 15ஆம் தேதி அசோக் நகர் 35வது தெருவில் கலையரசன் நின்று -கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கலையரசனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.
இதனால் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலையரசன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கலையரசனை கொலை செய்த சஞ்சய், அவரது அண்ணன் சக்திவேல், உறவினர் சுனில் குமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
அதாவது கலையரசன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழரசி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக தமிழரசி தனது கணவரை பிரிந்து ஒன்றரை ஆண்டுகளாக தனியாக வசித்து வந்துள்ளார்.
தமிழரசியின் அண்ணன் சக்திவேல் தனது தங்கையுடன் சேர்ந்து வாழும்படி கலையரசனிடம் கூறியதால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தனர். அதன் பிறகு தான் கடந்த 15ஆம் தேதி தனியாக நின்று கொண்டிருந்த கலையரசனை தமிழரசியின் சகோதரர்கள் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.