மத்தியப் பிரதேசம், இந்தூரில் உள்ள விஜய் நகரில் சமைக்காததற்காக ஏற்பட்ட தகராறில், மருமகள் ஒருவர் தனது மாமியாரை கல்லால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்ட நேஹா, இது வரை நான்கு திருமணங்கள் செய்திருக்கிறார். அதாவது 3 முறை ஏற்கனவே அவர் திருமணம் செய்த நிலையில் தற்போது 4-வதாக இவரை திருமணம் செய்திருந்தார்.

இது பற்றி வெளியான தகவலின்படி, நேஹா மற்றும் அவரது மாமியார் கோமதிக்கு இடையே திருமணத்திலிருந்து பல்வேறு காரணங்களால் அடிக்கடி சண்டைகள் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ நாளில், நேஹாவின் உடல்நிலை சரியில்லை என்பதால், அவர் மாமியாரிடம் உணவு சமைக்கச் சொல்கிறார். ஆனால் கோமதி சமைக்கவில்லை என்பதனால் இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் கோபத்தில் குளியலறைக்குள் இழுத்துச்சென்று, அருகில் கிடந்த கல்லால் கோமதியின் தலையில் பலமுறை அடித்ததாக மருமகள் நேஹா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் கோமதிக்கு பலத்த ரத்தக்கசிவு ஏற்பட்டது.

இந்த சம்பவம் நடந்த உடனே மகன் சந்தீப்பும் அவரது தந்தை கௌஷலும் வீட்டிற்கு வந்த நிலையில் கோமதி குளியலறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், அங்கு மருத்துவர்கள் கோமதி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து வெளியான தகவலின் படி போலீசார் நேஹாவை கைது செய்து, கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.