
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது 1 லட்சம் மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு ரூபாய் 14 லட்சத்திற்கு நம்பர் பிளேட் வாங்கிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஹமீர்பூரை சேர்ந்த சஞ்சீவ் குமார் சமீபத்தில் புதிய ஸ்கூட்டி ஒன்றை வாங்கியுள்ளார்.
அதற்கு விஐபி என்னை பெற விரும்பியுள்ளார். அதனால் போக்குவரத்து துறைக்கு விஐபி எண்ணை பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் போக்குவரத்து துறை ஆன்லைன் ஏலத்தில் அதிகபட்சமாக ரூபாய் 14 லட்சத்திற்கு HP21C-0001 என்ற பேன்சி நம்பரை வாங்கியுள்ளார்.
அந்த ஏலத்தில் இருவர் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஏலத்தின் முழு தொகையும் மாநில அரசின் வருவாயாக நேரடியாக டெபாசிட் செய்யப்படுவதாக போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இதுவே மாநிலத்தில் இருசக்கர வாகனத்திற்கு வழங்கப்பட்ட மிக விலையுயர்ந்த விஐபி பதிவு எண் எனவும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து ஸ்கூட்டி உரிமையாளர் சஞ்சீவ் கூறியதாவது, எனக்கு சிறப்பான தனித்துவமான எண்களை சேகரிப்பதில் ஆர்வம் அதிகம். எனவே எனது ஸ்கூட்டருக்கு விஐபி என்னை பெற விரும்பினேன். மேலும் எனது ஆர்வத்திற்கு விலையே இல்லை.
ஏதாவது சிறப்பான ஒன்றை பெற வேண்டும் என நினைத்தால் அதற்கான விலையை பற்றி கவலைப்படக்கூடாது எனவும் கூறியுள்ளார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து பலரும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.