உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாட்டியாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பார்கெய்ன் நகரில் நடந்த ஒரு கொடூர சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. அதாவது  ஃபரூக்காபாத் மாவட்டம் கைம்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உலியாபூர் கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான ரதிராம் நாட், தனது மனைவி ரீனா மற்றும் 9 குழந்தைகளுடன் செங்கல் சூளையில் வேலை செய்யும் நோக்கில் பார்கெய்ன் பகுதிக்கு கடந்த வாரம் குடியேறியிருந்தார்.

ஜூன் 17ஆம் தேதி கணவன்-மனைவிக்கு இடையே கள்ளகாதல் விவகாரம் தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து ஜூன் 18ஆம் தேதி இரவு ரதிராம் மர்மமாக காணாமல் போனார். இரண்டு நாட்கள் கழித்து ஜூன் 20ஆம் தேதி, அவரது மனைவி ரீனா தனது ஒன்பது குழந்தைகளை விட்டுவிட்டு, தனது காதலனான ஹனீஃப் என்பவருடன் தப்பிச் சென்றார். அந்த குழந்தைகள் சாலையோரத்தில் கஷ்டப்பட்டு அழுதுக் கொண்டிருந்ததை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

ஜூன் 22ஆம் தேதி காலை, பார்கெய்ன் பகுதியில் உள்ள ஒரு மூடிய சூளையில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை உணர்ந்த பொதுமக்கள், காரணம் என்னவென்று பார்வையிட்ட போது, அங்கு உள்ள தண்ணீர் தொட்டியில் ஒரு நபரின் கால்கள் மேலே தெரிந்தன. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள், பிரேதத்தை மீட்டு விசாரித்ததில், அது ரதிராமின் உடலாக இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இதற்கிடையில், ரதிராமின் சகோதரர் அரவிந்த், ரீனா மற்றும் ஹனீஃப் இருவரும் கூட்டாக திட்டமிட்டு ரதிராமை கொன்றதாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர். ரதிராமின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, அவரது ஒன்பது குழந்தைகளும் தற்காலிகமாக தாய்வழி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.